சனிக்கிழமையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வலியுறுத்தல்
சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி 2018 ஜனவரி மாதம் வரை சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்ட அனைத்து தனியார் மற்றும் பள்ளி வாகன ஓட்டுநர்கள் சங்கத் தலைவர் எம்.எஸ். ஜெயபாலன் மற்றும் நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த கோரிக்கை மனு விவரம்: காரைக்கால் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மாணவ, மாணவியரை வேன்களில் அழைத்துச் செல்லப்படுகிறது. டிச.19-ஆம் தேதி திருநள்ளாறு கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. இதன் காரணமாக, தொடர்ந்து ஜனவரி மாதம் வரையிலான ஒவ்வொரு சனிக்கிழமையில் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கானோர் திருநள்ளாறு, காரைக்கால் பகுதிக்கு வந்து செல்வார்கள்.
இதனால் பள்ளி மாணவர்களை குறித்த நேரத்தில் பள்ளிகளுக்கு கொண்டுசென்று விட முடியாத சூழலில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். எனவே, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, டிசம்பர் மற்றும் 2018 ஜனவரி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகளில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.