காரைக்கால் வேளாண் கல்லூரி இளங்கலை மாணவர்களின் கிராம முகாம் வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது.
காரைக்கால் பண்டித ஜவாஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இளங்கலை மாணவர்கள் குழு, கிராம முன்னேற்ற ஊக்கம் குறித்து விழுதியூர் அருகே உள்ள மானாம்பேட்டை கிராமத்தை தேர்ந்தெடுத்து, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அந்தப் பகுதியில் பல்வேறு விழிப்புணர்வுப் பணியில் ஈடுபட்டனர்.
நிறைவு நாளான வியாழக்கிழமை கிராமத்தில் மதுப் பழக்கத்தை கைவிடவும், புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேரணி நடத்தினர். இதில் மானாம்பேட்டை அரசு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.
மது அருந்தக்கூடாது, புகைப்பழக்கத்தை கைவிடவேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி மாணவர்கள் முக்கிய வீதிகளுக்குச் சென்று பள்ளிக்குத் திரும்பினர். கிராமத்தினரிடையே புற்றுநோய் வருவதற்கான காரணங்கள், சிகிச்சை முறைகள் குறித்தும் வேளாண் கல்லூரி மாணவர்கள் விளக்கினர்.
முகாம் நிறைவு தொடர்பாக வேளாண் கல்லூரி மாணவர்கள் கூறும்போது, மானாம்பேட்டை கிராமத்தை தத்தெடுக்கும் வகையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அரசுப்பள்ளியை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மிக்கதாக மாற்றியமைக்கப்பட்டது. குறிப்பாக பள்ளி வளாகத்தில் பல்வேறு செடிகள் நடப்பட்டன.
கிராமத்தினருக்கு வேளாண்மையில் நவீனத்துவம் குறித்தும், இயற்கை வேளாண்மையில் ஈடுபாடு காட்டவேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கப்பட்டது. கிராம வேளாண்மை குறித்து விவசாயிகள் தெரிவித்த கருத்துகளை அறிந்துகொண்டோம். இந்த முகாமில் மாணவர்கள் பா.அரவிந்த், ஆர்.அருள்பிரசாத், எல்.கோபிஆனந்த், பி.அப்துல், பி.தருண்ரெட்டி, எல்.டி.திருமருதன், கே.அதியமான் ஆகியோர் பங்கேற்றதாக தெரிவித்தனர்.