குடிநீர் வரவில்லை எனக் கூறி அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் காலி குடங்களுடன் திங்கள்கிழமை மறியல் முயற்சியில் ஈடுபட்டனர்.
காரைக்கால் பகுதி கோட்டுச்சேரியில் அரசு ஊழியர் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.
இக்கட்டடத்தில் 100 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த வளாகத்துக்கு கடந்த 2 மாதங்களாக முறையாக குடிநீர் வருவதில்லையாம்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசியும் தீர்வு ஏற்படாத நிலையில், குடியிருப்பில் உள்ளவர்கள் காலி குடங்களுடன், கோட்டுச்சேரி பகுதி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட புறப்பட்டனர். தகவலறிந்த கோட்டுச்சேரி காவல்நிலைய உதவி ஆய்வாளர் பெருமாள் மற்றும் போலீஸார் குடியிருப்புப் பகுதிக்கு சென்று மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பொதுப்பணித் துறை பொறியாளர் சுப்ரமணியனும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றார். அடுத்த 2 நாள்களுக்குள் குடிநீர் விநியோகம் முறைப்படுத்தப்படும். அதுவரை இக்குடியிருப்புவாசிகளுக்கு டேங்கர் மூலம் குடிநீர் வரவழைத்து விநியோகிக்கப்படும் என உறுதியளித்தார். அதிகாரிகளின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டத்தை குடியிருப்புவாசிகள் கைவிட்டனர்.