மது அருந்தும் பழக்கத்தை தொடங்காமலும், மது அருந்துவோர் அதை கைவிடவும் வேண்டும் என காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ப. பார்த்திபன் அறிவுறுத்தினார்.
காந்தி ஒருங்கிணைந்த மது போதை மறுவாழ்வு மையம், அவ்வை கிராம நலச் சங்கம் ஆகியவை இணைந்து உலக போதை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கை புதன்கிழமை நடத்தின.
பள்ளிகளில் இருந்து என்.சி.சி. மற்றும் என்.எஸ்.எஸ். மாணவ, மாணவியர் கலந்துகொண்ட பேரணி மாவட்ட ஆட்சியரகம் முன்பாக தொடங்கியது.
பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்து ஆட்சியர்
ப. பார்த்திபன் பேசியது: போதை ஒழிப்பு விழிப்புணர்வு செயல்பாடுகள் அதிகரிக்க வேண்டும். மது அருந்தும் பழக்கத்தை தொடங்காமலும், மது அருந்துவோர் அதை கைவிடவும் வேண்டும். இதற்கான செயலை தாமாக செய்ய முன்வர வேண்டும் என்றார் ஆட்சியர். பேரணி தொடக்க நிகழ்ச்சியில் சார்பு ஆட்சியர் ஆர்.கேசவன், கூடுதல் ஆட்சியர் எம்.தினேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கருத்தரங்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாவட்ட கூடுதல் ஆட்சியர் எம்.தினேஷ் பேசியது: மாணவர்கள் வசிக்கும் பகுதிகளில் போதைக்கு அடிமையாகியுள்ளோர் குறித்து, போதை ஒழிப்பு மையத்துக்கு தகவல் தெரிவிக்கவேண்டும். இதன் மூலம் அவர்களை காப்பாற்ற முடியும். மாணவர்கள் எந்த சூழலிலும் போதைப் பழக்கத்துக்கு ஆளாகிவிடக்கூடாது என்றார் அவர். சமூக நலத் துறை உதவி இயக்குநர் பி. சத்யா, போதை ஒழிப்பு மையத்தைச் சேர்ந்த கே. மகேஸ்வரி, செயலர் எம். கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர். போதை ஒழிப்பு தொடர்பான உறுதிமொழியை மாணவ, மாணவியர் ஏற்றுக்கொண்டனர். கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.