காரைக்கால் வணிக வரி அலுவலகம் சார்பில், சேம்பர் ஆஃப் காமர்ஸ் உறுப்பினர்களுக்கு ஜி.எஸ்.டி. என்கிற சரக்கு மற்றும் சேவை வரி குறித்த விளக்கக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வணிக வரி அலுவலர் எஸ். சரவணக்குமார் தலைமை வகித்தார்.
ஜூலை 1-ஆம் தேதி அமலாகவுள்ள ஜி.எஸ்.டி. குறித்தும், வணிகர்கள் செய்துகொள்ளவேண்டிய பதிவு குறித்தும், அடுத்தடுத்த நடைமுறைகளுக்கு வணிகர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்வது குறித்து வணிக வரி அலுவலர் பேசினார்.
சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட கணக்குத் தணிக்கையாளர் பி. கணபதி சுப்பிரமணியன், வணிகர்கள் எவ்வாறு கணக்கு தாக்கல் செய்வது என்பது குறித்து விரிவாக விளக்கம் அளித்தார். ஜி.எஸ்.டி. அமலாவதன் மூலம் புதுச்சேரி மாநில வணிகர்களுக்கு பயன் கிடைக்கும் என தெரிவித்த அவர், வணிகர்கள் இதுதொடர்பாக எழுப்பிய பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்துப் பேசினார். வணிக வரி அலுவலகத்தில், துணை வணிக வரி
அலுவலர் தலைமையில் ஜி.எஸ்.டி. உதவி மையம் இயங்கி வருவதாகவும், இதை வணிகர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என வணிக வரி அலுவலக அதிகாரி கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தில் சேம்பர் ஆஃப் காமர்ஸ் தலைவர் வி. ஆனந்தன், செயலர் ஜெ.சிவகணேஷ் உள்ளிட்ட பொறுப்பாளர்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.