காரைக்கால் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவில் 90.16 சதம் தேர்ச்சி பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ப.பார்த்திபன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்கால் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 27 அரசுப் பள்ளிகள், 6 அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள், 28 சுயநிதி தனியார் பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர்.
அரசுப் பள்ளிகளில் 693 மாணவர்கள், 668 மாணவியர் என மொத்தம் 1,361 பேர் தேர்வு எழுதியதில் 535 மாணவர்கள், 599 மாணவியர் என மொத்தம் 1,134 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தனியார் பள்ளிகளில் 714 மாணவர்கள், 750 மாணவியர் என மொத்தம் 1,464 தேர்வு எழுதியதில், 671 மாணவர்களும், 742 மாணவியரும் என மொத்தம் 1,413 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக தேர்வு எழுதிய 2,825 பேரில் 2,547 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி வீதம் 90.16 ஆகும். காரைக்காலில் கடந்த ஆண்டு தேர்ச்சி வீதத்தைக் காட்டிலும் 3.24 சதவீதம் கூடுதலாகும். காரைக்காலில் 26 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இவற்றில் அரசுப் பள்ளிகள் 5. காரைக்கால் மாணவர்கள் கணிதத்தில் 28 பேரும், அறிவியலில் 38 பேரும், சமூக அறிவியலில் 82 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்
பெற்றுள்ளனர்.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் காரைக்கால் மாவட்டம் கடந்த ஆண்டைக் காட்டிலும் குறைந்த தேர்ச்சி கிடைத்த நிலையில், பத்தாம் வகுப்பு முடிவில் கடந்த ஆண்டைவிட கூடுதலாக கிடைத்துள்ளது. வீழ்ச்சியிலிருந்து எழுச்சி பெற்றிருப்பதாக கல்வித் துறையினர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.