திருநள்ளாறு பகுதியைச் சேர்ந்தோருக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து மருத்துவச் சிகிச்சைக்கான நிதியுதவியை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் திங்கள்கிழமை வழங்கினார்.
பல்வேறு நோயினால் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவ சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு, முதல்வர் நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி அளிக்கிறது.
இந்த நிதியிலிருந்து, காரைக்கால் வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர்.என். திருமுருகன், திருநள்ளாறு தொகுதியில் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் ஆகியோர் அவரவர் தொகுதிக்குள்பட்டோருக்கு உதவி செய்ய முதல்வருக்கு பரிந்துரைத்திருந்தனர்.
அதன்படி, காரைக்கால் வடக்குத் தொகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் திருநள்ளாறு தொகுதியில் 2 நபர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம், 8 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் காசோலைகள் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரகத்துக்கு பயனாளிகள் வரவழைக்கப்பட்டு, மருத்துவ உதவிக்கான காசோலை வழங்கப்பட்டது.
திருநள்ளாறு தொகுதியைச் சேர்ந்த 10 பேருக்கு அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் காசோலைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவன் உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர்.