கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஏ.ஐ.டி.யு.சி. காரைக்கால் மாவட்ட அமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரகம் அருகே புதுச்சேரி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலர் ஏ.எஸ்.சிங்காரவேலு தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக புதுச்சேரி மாநில இந்திய கம்யூனிஸ்ட் செயலர் ஆர்.விஸ்வநாதன், துணை செயலர் ஏ.ராமமூர்த்தி, ஏ.ஐ.டி.யு.சி. பொதுச்செயலர் ஐ.தினேஷ் பொன்னையா, இந்திய கம்யூனிஸ்ட் காரைக்கால் பிரதேச செயலர் க.தமிழழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.
கட்டுமானத் தொழிலாளர் அலுவலகத்தில் பதிவு அதிகாரி உடனடியாக நியமிக்கவேண்டும். முறைசாரா மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸாக ரூ.10 ஆயிரம் வழங்கவேண்டும். கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள மழைக்கோட், கொசுவலை, சைக்கிள் ஆகியவற்றை அரசு உடனடியாக வழங்கவேண்டும்.கட்டுமானப் பொருள்களான மணல், சிமென்ட், கம்பி விலை கட்டுப்பாட்டில் இருக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். கட்டுமானத் தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை உதவித் தொகை வழங்கவேண்டும்.
தொழிலாளர்களுக்கு மழைக் காலத்தில் வேலை இழப்பு ஏற்படுவதால், மழை நிவாரணம் வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
இந்திய கம்யூனிஸ்ட், ஏ.ஐ.டி.யு.சி., விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம், மாதர் சங்கம் உள்ளிட்டவற்றின் பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.