கணவரை கழுத்து அறுத்துக் கொன்ற மனைவி மற்றும் அவரது கள்ளக் காதலன் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து காரைக்கால் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் அருகே உள்ள பட்டினச்சேரி சுனாமி நகரைச் சேர்ந்தவர் பழனிவேல் (40). இவர் மீன்பிடித் தொழில் செய்துவந்தார். இவரது மனைவி முத்துமாரி (37). இத் தம்பதிக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர்.
முத்துமாரி மீன் வியாபாரம் செய்ய வாகனத்தில் செல்லும்போது வாகன ஓட்டுநர் ஜெயக்குமார் (42) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையொட்டி தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். பட்டினச்சேரி கிராமத்தில் பஞ்சாயத்தார் இப்பிரச்னையில் தலையிட்டு தம்பதிகள் ஒற்றுமையாக வாழும்படி அறிவுறுத்தினர். இந்த நிலையில், கடந்த 5.11.2012 அன்று வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பழனிவேல் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
சந்தேகத்தின்பேரில் முத்துமாரியை திருப்பட்டினம் போலீஸார் விசாரணை செய்தபோது, தமது கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்ததால், ஜெயக்குமார் தூண்டுதலின்பேரில் கணவரை மீன் அறுக்கும் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்ததாகக் கூறினார்.
அவரது வாக்குமூலத்தின்படி அவரையும், ஜெயக்குமாரையும் போலீஸார் கைது செய்து, காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
கொலை வழக்கு விசாரணை வியாழக்கிழமை நிறைவுக்கு வந்தது. முத்துமாரி மற்றும் ஜெயக்குமாரை போலீஸார் காரைக்கால் மாவட்ட செஷன்ஸ் நீதிபதி சிவகடாட்சம் முன்பாக வியாழக்கிழமை ஆஜர்படுத்தினர். குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞர் ஏ.வி.ஜெ.செல்வமுத்துக்குமரன் ஆஜரானார். இருவரும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.