காரைக்கால் மாவட்டம் முழுவதும் சுற்றிவரும் வகையில் டெங்கு விழிப்புணர்வு பிரசார ஊர்திகள் வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன.
புதுச்சேரி நலவழித்துறை மூலம் டெங்கு விழிப்புணர்வு பிரசார ஊர்திகள் புதுச்சேரி பிராந்தியத்தில் புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன. காரைக்கால் மாவட்டத்தில், டெங்கு கொசு உருவாகும் காரணிகளை விளக்கியும், காய்ச்சல் ஏற்பட்டால் மேற்கொள்ளவேண்டிய சிகிச்சை முறைகளை விளக்கியும் விழிப்புணர்வு வாசக பதாகை மற்றும் எல்.இ.டி. தொலைக்காட்சி மூலம் விழிப்புணர்வு குறும்படம் ஒளிபரப்பாகும் அமைப்புடன் 2 வாகனங்கள் காரைக்காலில் உருவாக்கப்பட்டன. இந்த ஊர்தியை மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் ஆர்.கேசவன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் நலவழித்துறை துணை இயக்குநர் பி.நாராயணசாமி, அரசு பொதுமருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் பி.சித்ரா, மருத்துவர் மதன்பாபு, நோய்த் தடுப்பு உதவியாளர் சேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.