பொதுத் தேர்வு மற்றும் உயர் கல்வி குறித்து ஒரு நாள் பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 10 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலா 10 மாணவ மாணவியர் வீதம், 100 பேர் தேர்வு செய்யப்பட்டு, பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் விதம், உயர்கல்வி தேர்வு குறித்து விளக்கும் முகாம் பெருந்தலைவர் காமராஜர் கல்வியியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன் முகாமை தொடங்கி வைத்துப் பேசியது:
போட்டிகள் நிரம்பிய கல்விச் சூழலில், மாணவர்கள் இலக்கு வைத்துப் படிக்கவேண்டும். இலக்கை அடையும் நோக்கில் கடுமையாக உழைக்கவேண்டும். பொதுத்தேர்வை கண்டு அஞ்சக்கூடாது. கடந்த ஆண்டுகளின் வினாத் தாள்களை மாணவர்கள் ஆய்வு செய்யவேண்டும். சந்தேகங்களை அவ்வப்போது கேட்டு தெளிவுப்படுத்திக்கொள்ளவேண்டும். கல்வியறிவை மேம்படுத்திக்கொள்ள இணையதள வசதியை பயன்படுத்திக்கொள்ளவேண்டும். நாம் விரும்பும் உயர்கல்வியைப் படிக்கத் தேவையான தகுதியை இப்போதே வளர்த்துக்கொள்ளவேண்டும் என்றார் ஆட்சியர்.
பெங்களூரு, கோபிச்செட்டிப்பாயைம், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் இருந்து கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்ட கல்வியாளர்கள் பயிற்சியாளர்களாக கலந்துகொண்டு பேசினர். தற்போதைய மாணவர்களின் சூழலை விளக்கிய அவர்கள், தேர்வுக்கு மாணவர்கள் எவ்வாறு தயாராகவேண்டும். அடுத்த உயர்கல்வியை எவ்வாறு தேர்வு செய்யவேண்டும். அதற்கேற்ப எவ்வாறு தகுதியை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்பது குறித்து விரிவாக விளக்கம் அளித்தனர். கல்வித்துறை துணை இயக்குநர் ஜி. சுப்ரமணியன் உள்ளிட்ட ஆசிரியர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். காரைக்கால் மாவட்ட நிர்வாகம் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது.