திருமலைராயன்பட்டினம் பகுதிக்கு170 குப்பைத் தொட்டிகள் தனியார் நிறுவனம் சார்பில் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
காரைக்கால் நகராட்சிப் பகுதியில் திடக் கழிவு மேலாண்மை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி வீடு, நிறுவனங்களில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை பறவைப் பேட் பகுதியில் இயற்கை உரம் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், திருமலைராயன்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்துப் பகுதியில் போதுமான அளவில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்படாததால், பொதுமக்கள் சாலையோரங்களில் குப்பைகளை கொட்டிவருகின்றனர்.
இதனால், திருமலைராயன்பட்டினம் பகுதி வாஞ்சூரில் இயங்கிவரும் கெம் பிளாஸ்ட் சன்மார் என்கிற தனியார் நிறுவனம், தனது நிறுவன சமூக பொறுப்புணர்வுத் திட்ட நிதியின் மூலம் 170 குப்பை சேகரிப்புத் தொட்டிகளை திருமலைராயன்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகத்துக்கு வழங்கியது.
இத்தொட்டிகளை சட்டப்பேரவை உறுப்பினர் கீதாஆனந்தனிடம், கெம் பிளாஸ்ட் சன்மார் நிறுவன துணைத் தலைவர் (ஆபரேஷன்) பழனிசாமி, பொதுமேலாளர் (பர்சனல்) பத்மநாபன் ஆகியோர் சனிக்கிழமை ஒப்படைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த பகுதியில் உள்ள வீதிகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பை, கண்ணாடி போன்ற பொருள்களை தனித்தனியே சேகரிக்கும் வகையில் வீதிக்கு தலா 3 தொட்டிகள் வைக்கப்படும் என பஞ்சாயத்து நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.