காரைக்காலுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க, பிராந்தியம் முழுவதும் தூய்மையாக இருக்கவேண்டியது அவசியம் என்றார் அமைச்சர் ஆர். கமலக்கண்ணன்.
காரைக்காலில் தூய்மை இந்தியா திட்டம் சார்பில் இருவார கால ஒருங்கிணைந்த தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டுவருகிறது. இதன் ஒரு பகுதியாக காரைக்கால் கடற்கரையில் துப்புரவு விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் கல்வியியல் கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்று துப்புரவு பணி மேற்கொண்டனர்.
முன்னதாக, இப்பணியை வேளாண் அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் தொடங்கிவைத்துப் பேசியது :
தூய்மை குறித்த விழிப்புணர்வு காரைக்காலில் சிறந்த முறையில் நடத்தப்பட்டுவருகிறது. நாம் குப்பைகளை மக்களிடம் கேட்டுப் பெறும்போதோ, சாலையில் குப்பைகளை அகற்றும்போதோ பார்க்கும் மக்களிடம், குப்பைகளை உரிய இடத்தில் கொட்டவேண்டும் என்ற சிந்தனை ஏற்படும்.
தூய்மை சேவை நமக்குத் தேவையாக இருக்கிறது. தூய்மையினால் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தமுடியும். சுற்றுலாப் பயணிகள் காரைக்காலுக்கு அதிக அளவில் வர தூய்மை மிக முக்கியப் பங்காற்றுகிறது.
எனவே, காரைக்கால் நகரம் தூய்மையாக இருக்கவேண்டியது அவசியம் என்றார் அமைச்சர்.
பின்னர், கடற்கரையில் கிடந்த குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார். இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.யு. அசனா, மாவட்ட கூடுதல் ஆட்சியர் எம். தினேஷ், உள்ளாட்சித் துறை துணை இயக்குநர் மகாலிங்கம், பெருந்தலைவர் காமராஜர் கல்வியியல் கல்லூரி முதல்வர் பானுமதி, நாட்டு நலப்பணித் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ். கனகராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.