காரைக்கால் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
முதலில் இணையதளம் மூலம் பெறப்பட்ட மனுக்கள், ஆட்சியர் ஆர். கேசவன் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டன.
பின்னர் பொதுமக்கள் 15 பேர் நேரடியாக மனுக்கள் அளித்தனர். பெரும்பாலான மனுக்களில், குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு கட்ட 3 ஆவது தவணை வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் புதிதாக உருவான தெருக்களில் விளக்குகள் எரியவில்லை என்றும் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இதற்கு பதிலளித்த ஆட்சியர், மொத்தம் 10100 தெருவிளக்குகளும், 135 ஹைமாஸ் விளக்குகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. புதிதாக உள்ள பகுதிகளில் எவ்வளவு விளக்குகள் தேவை என்பது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் அரசுக்கு அனுப்பி அனுமதி வழங்கப்படும். இதேபோல் கிராமங்களில் இரண்டு விதமான குப்பைத் தொட்டிகள் வைத்து, பொதுமக்கள் அதில் குப்பைகளைப் பிரித்து வழங்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளன. நீலக்கிடங்கு வீதியில் குப்பைகள் வீதியில் கொட்டப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். கூட்டத்தில் அனைத்துத்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.