திருப்பட்டினம் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அரிமா சங்கம் சார்பில், இருக்கைகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
திருப்பட்டினம் வீழி வரதராஜப் பெருமாள் கோயில் வீதியில் கருடப்பாளையம் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளி கட்டடம் சிதிலமைடந்திருப்பதாகவும், மாணவர்கள் சேர்க்கை ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வருவதற்கேற்ப கட்டடத்தைப் புதுப்பித்துத் தரவேண்டும், உடனடியாக கழிவறை கட்டித்தர வேண்டும் என பள்ளி நிர்வாகத்தினர், கல்வித்துறை மற்றும் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த பள்ளியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆய்வு செய்த சட்டப் பேரவை உறுப்பினர் கீதாஆனந்தன், புதுச்சேரி மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கு ரூ.30 லட்சம் நிதி ஒதுக்க மக்களவை உறுப்பினர் ராதாகிருஷ்ணனிடம் கோரிக்கை விடுத்தார். இதற்கான தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, தற்போதைய கட்டடத்தைத் தற்காலிகமாக சீரமைத்து, கழிவறையை சட்டப் பேரவை உறுப்பினர் கட்டித் தந்தார்.
மேலும், மாணவர்களுக்கு திருப்பட்டினம் ஷைன் அரிமா சங்கம் சார்பில், 35 நாற்காலிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், சட்டப் பேரவை உறுப்பினர் கலந்துகொண்டு பள்ளி நிர்வாகத்தினரிடம் இவற்றை வழங்கினார். அரிமா சங்க நிர்வாகிகள் பசுபதி, என். குமரேசன், திருப்பட்டினம் வணிகர் சங்கத் தலைவர் ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.