தமிழகத்துக்கு மது புட்டிகள் கடத்திய 3 பேரை கலால் துறையினர் திங்கள்கிழமை பிடித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
காரைக்காலில் இருந்து தமிழகத்துக்கு மது கடத்தப்படுவதாகவும், அனுமதியின்றி பல்வேறு இடங்களில் மது புட்டிகள் விற்பனை செய்யப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. காரைக்கால் சார்பு ஆட்சியரும், கலால் துறை துணை ஆணையருமான ஏ. விக்ரந்த்ராஜா உத்தரவின்பேரில், கலால் துறையினர் மது கடத்தல் தொடர்பாக தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கலால் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை இரவு நகரப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, பாரதியார் சாலையில் வேகமாக வந்த சுமையேற்றும் வாகனம் ஒன்றை நிறுத்தி, சோதனை செய்தபோது சாக்கு மூட்டைகளில் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள பல்வேறு வகை மது புட்டிகள் இருந்ததை கண்டறிந்தனர். விசாரணை செய்தபோது, நகரப் பகுதியில் உள்ள மதுக்கடையில் வாங்கிக்கொண்டு, தமிழகப் பகுதிக்கு செல்வதாக தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, வாகனத்திலிருந்த திருப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (42), பன்னீர் (47), அழகர் (37) ஆகியோரை பிடித்ததோடு, வாகனத்தையும், மது புட்டிகளையும் பறிமுதல் செய்து கலால் துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து கலால்துறை அதிகாரி பொய்யாதமூர்த்தி கூறியது: பறிமுதல் செய்த வாகனம் மற்றும் மது புட்டிகள் சுமார் ரூ.1.50 லட்சம் மதிப்புடையது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவது மற்றும் பிற நடவடிக்கைகள் குறித்து கலால் துறை துணை ஆணையர் முடிவு செய்வார் என்றார்.