காரைக்கால் வெளி விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணியை சட்டப்பேரவை உறுப்பினர் புதன்கிழமை ஆய்வு செய்தார்.
காரைக்காலில் 35 ஏக்கர் நிலப்பரப்பு உள் விளையாட்டு அரங்கம், வெளி விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணிக்காக ஒதுக்கப்பட்டது. ரூ.18 கோடி திட்டத்தில் தொடங்கப்பட்ட பணியில், முதல்கட்டமாக உள்விளையாட்டு அரங்கம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டி முடித்து பயன்பாட்டுக்கு வந்தது.
தற்போது வெளி அரங்க கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில், காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.யு.அசனா, அரங்கப் பணியை புதன்கிழமை பார்வையிட்டார். பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் எஸ்.சேகர், செயற்பொறியாளர் ஏ.ராஜசேகரன் உள்ளிட்ட அலுவலர்கள் பேரவை உறுப்பினருக்கு திட்டப்பணிகள் குறித்து விளக்கிக் கூறினர்.
தற்போது ரூ.3.5 கோடிக்கான திட்டப்பணிகள் நடைபெற்றுவருவதாகவும், மேலும் சில பணிகள் மேற்கொள்ள ரூ.5 கோடி தேவையிருக்கிறது. இதனை புதுச்சேரி அரசு ஒதுக்கித்தருமேயானால், எஞ்சிய பல விளையாட்டுக்கான பிரிவுகள் அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவரமுடியும் என அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆய்வுக்குப் பின் சட்டப்பேரவை உறுப்பினர் அசனா கூறியது: காரைக்கால் விளையாட்டு அரங்கத்தை நிர்வகிக்க விளையாட்டுக் கவுன்சிலை அரசு அமைக்கவேண்டும்.
ஒவ்வொரு விளையாட்டுக்கும் சிறப்புப் பயிற்சியாளரை நியமிக்கவேண்டும். உள் விளையாட்டு அரங்கத்திலும், வெளி அரங்கத்திலும் அனைத்துத் தரப்பு விளையாட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ளவும், தேசிய அளவிலான போட்டிகளை நடத்தும் வகையில் தரத்தை உயர்த்த வேண்டும். இதுகுறித்து முதல்வரை சந்தித்துப் பேசி நடவடிக்கை எடுக்கவுள்ளேன்
என்றார்.