அரசு உதவி பெறும் பள்ளிகளின் பெற்றோர் சங்கம், காரைக்கால் மு.வி.ச. உயர்நிலைப் பள்ளி இணைந்து கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியை புதன்கிழமை நடத்தியது.
மு.வி.ச.பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பெற்றோர் சங்கத் தலைவர் அ.வின்சென்ட் தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கூடுதல் ஆட்சியர் எம்.தினேஷ் கலந்துகொண்டு மாணவ- மாணவியரிடையே பேசியது :
மாணவர்கள் பள்ளி, கல்லூரியில் நல்லொழுக்கத்துடன் கல்வி கற்றல் அவசியம். எல்லாவற்றுக்கும் போட்டித் தேர்வுகள் என்பது பரவலாக்கப்பட்டுவிட்டது. எனவே போட்டித் தேர்வுக்கு மாணவர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ளவேண்டும்.
பொதுத்தேர்வு எழுதச் செல்லும் மாணவர்கள் அச்சத்தை தவிர்க்கவேண்டும். நம்மால் சாதிக்க முடியும் என்ற உறுதியை மனதிற்கொண்டு, தேர்வை சந்திக்கவேண்டும். அதற்கேற்ப கல்வியை நாம் கற்கவேண்டும். குறிப்பாக தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் தொலைக்காட்சி பார்ப்பதையும், செல்லிடப்பேசியில் சமூக வலைதள பயன்பாட்டில் ஈடுபடுவதையும் முடிந்த வரை தவிர்த்துவிடவேண்டும் என்றார்.
பள்ளி மேலாளர் லியாகத் அலி, பெற்றோர் சங்க மாவட்ட செயலர் கே.மணவாளன், மக்கள் தொடர்பு அலுவலர் ஐ.அப்துல் ரஹீம் ஆகியோர் பேசினர். தலைமையாசிரியர் தேவராஜன் வரவேற்றார். பள்ளியின் பெற்றோர் சங்கத் தலைவர் ஹாஜி முகம்மது நன்றி கூறினார்.