கோட்டுச்சேரி பகுதியில் காவலரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக சகோதரர் இருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
கோட்டுச்சேரி பகுதியைச் சேர்ந்த கௌதம் (28), தினேஷ் (23). இவ்விருவரும் சகோதரர்கள். ஞாயிற்றுக்கிழமை மாலை இருவரும் மதுபோதையில், மேரி தெருவில் நின்றுகொண்டு சாலையில் செல்லும் பொதுமக்களைப் பார்த்து ஆபாசமாகப் பேசிக்கொண்டிருந்தனராம்.
ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கோட்டுச்சேரி காவல்நிலைய காவலர் கிருஷ்ணனவேலு, இவ்விருவரையும் அந்த பகுதியிலிருந்து சென்றுவிடும்படி அறிவுறுத்தியுள்ளார். காவலரையும் ஆபாசமாக பேசியதோடு, அவரது கடமையை செய்யவிடாமல் தடுத்ததாகக் கூறப்படுகிறது. சகோதரர்கள் இருவரையும் கைது செய்த போலீஸார், காவலரை பணி செய்யவிடாமல் தடுத்தல், பொதுமக்களை ஆபாசமாக திட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.