ஜி.எஸ்.டி., கேளிக்கை வரியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறு திரையரங்க உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினர்.
முன்னாள் அமைச்சர் ஏ.எம்.எச்.நாஜிம் தலைமையில் காரைக்கால் திரையரங்க உரிமையாளர்கள் பி.எஸ்.ஆர்.சின்னையன், மகேஷ் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவனை திங்கள்கிழமை சந்திக்க சென்றனர். ஆட்சியர் வேறு அலுவலில் இருந்ததால், ஆட்சியரக அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். தொடர்ந்து மாவட்ட கூடுதல் ஆட்சியர் எம்.தினேஷை சந்தித்துப் பேசினர்.
ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பது : திரைப்படத்திற்கான கட்டணம் ஜி.எஸ்.டி. அமலாக்கத்துக்குப் பின் கடுமையாக உயர்ந்துவிட்டது. இதனால் மக்களும், திரையரங்க உரிமையாளர்களும் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் திரையரங்கத்துக்கான கேளிக்கை வரியும் 25 சதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. வரி குறைக்கவேண்டும், கேளிக்கை வரியை ரத்து செய்யவேண்டும். இந்த கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி மார்ச் 14-ஆம் தேதி முதல் புதுச்சேரி மாநில அளவில் தொடங்கவுள்ள திரையரங்க காட்சிகள் ரத்து போராட்டத்தில் பங்கேற்கவுள்ளோம் என அதில் கூறப்பட்டுள்ளது.
போராட்டம் தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், காரைக்காலில் உள்ள 3 திரையரங்கங்களில் 2 திரையரங்கங்களில் திங்கள்கிழமை முதல் முன்கூட்டியே காட்சிகளை ரத்து செய்துவிட்டனர். கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் வகையில் போராட்டத்தை முன்னதாகவே தொடங்கிவிட்டதாக இந்த திரையரங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.