காரைக்காலில் அமல்படுத்தப்பட்ட 144 தடை உத்தரவைத் திரும்பப் பெற வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காரைக்கால் பேருந்து நிலையம் அருகே பழைய ரயிலடி பகுதியில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு வட்டச் செயலர் எஸ்.எம். தமீம் தலைமை வகித்தார். ஜனநாயக இயக்கங்களின் செயல்பாடுகளைத் தடுக்கும் வகையில் காரைக்கால் ஆட்சியரத்தைச் சுற்றி அமல்படுத்தியுள்ள 144 தடை உத்தரவை உடனடியாக ரத்து செய்யவேண்டும். பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை மத்திய அரசு உடனடியாக கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.
புதுச்சேரியில் போலி ஏடிஎம் அட்டை மூலம் பணமோசடியில் ஈடுபட்டோரை கைது செய்யவும், அவர்களிடமிருந்து பணத்தைப் பறிமுதல் செய்யவும் அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதை அரசு தடுக்க வேண்டும். சட்ட விதிகளை மதிக்காத பள்ளிகளின் உரிமங்களை அரசு ரத்து செய்ய வேண்டும்.
அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள மாத ஊதியத்தை வழங்க வேண்டும். காரைக்காலில் அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும். உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்.
காரைக்காலுக்குரிய 7 டிஎம்சி காவிரி நீரை பெறுவதற்கு வேளாண் அமைச்சர், நீர்ப்பாசனத்துறை அலுவலர்கள், காரைக்கால் பகுதி விவசாயிகள் அடங்கிய குழுவை புதுச்சேரி அரசு உடனடியாக அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
கூட்டத்தில் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் வே.கு. நிலவழகன், அ. வின்சென்ட், மாவட்டக்குழு உறுப்பினர்கள் என்.எம். கலியபெருமாள், திவ்யநாதன், பாக்கியராஜ், துரைசாமி, கிளை பகுதிச் செயலர் ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.