திருநள்ளாறு பகுதியில் நண்பர் பிறந்த நாள் விருந்தில் கஞ்சா பயன்படுத்தியதாக 9 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
திருநள்ளாறில் சுற்றுலாவினர் தங்கும் விடுதியொன்றில் பொறியியல் பட்டதாரியான ஷியாம் சுந்தர் என்பவர் தனது பிறந்த நாளுக்காக நண்பர்களுக்கு வியாழக்கிழமை இரவு விருந்து கொடுத்துள்ளார்.
இந்த விருந்தில் காரைக்கால் மற்றும் திருநள்ளாறு பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர்கள் விக்ரமன், கிஷோர், குல்முகம்மது, வினோத்ராஜ், வீரமணி, ஸ்ரீபன்ராஜ், விஜய், தினேஷ் ஆகிய 8 பேரும் கலந்துகொண்டனர். இவர்கள், போதைப் பொருளான கஞ்சா வைத்திருப்பதாக திருநள்ளாறு காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், காவல் ஆய்வாளர் பாலமுருகன், உதவி ஆய்வாளர் பிரவீன்குமார், சுரேஷ் ஆகியோர் விடுதிக்குச் சென்று சோதனையிட்டபோது, மேற்கண்ட 9 பேரும் கஞ்சாவை பயன்படுத்தியது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூ.1,000 மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார், 9 பேர் மீதும் போதைப் பொருள் வைத்திருந்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனர்.
பின்னர், 9 பேரையும் காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தி, நீதிபதி பிரபு உத்தரவின் பேரில் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.