இந்தியாவுக்கு வரும் அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் உதவிக்காக கட்டணமில்லா தொலைபேசி சேவை மூலம் பல்வேறு மொழிகள் உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
இந்தியாவுக்கு வருகை தரும் அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் உதவிக்காக பல்வேறு மொழிகள் உதவி மையத்தை மத்திய சுற்றுலா அமைச்சகம் அமைத்துள்ளது. 12 தேசிய மொழிகளிலும் பதில் பெறும் வகையில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. கட்டணமில்லா சேவையில் 1800111363 என்ற தொலைபேசி எண் மற்றும் 1363 -என்ற குறியீட்டு எண்ணை தொடர்பு கொண்டு சுற்றுலாப் பயணிகள் உதவி பெறலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் பயணிக்கும் போது இக்கட்டான சூழ்நிலைகளில், இந்த மையத்தைத் தொடர்பு கொண்டு உதவி பெறலாம் என மத்திய சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனவே, சுற்றுலாப் பயணிகள் இந்த வாய்ப்பை உரிய வகையில் பயன்படுத்திக் கொள்ளலாம் ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.