நாகை மாவட்ட ஜாக்டோ - ஜியோ கூட்டத்தில், ஆக. 26-ஆம் தேதி நாகை அவுரித் திடலில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாகை மாவட்ட ஜாக்டோ - ஜியோ ஆலோசனைக் கூட்டம், நாகையில் சனிக்கிழமை நடைபெற்றது. அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஏ.டி. அன்பழகன், கே. செல்வன், பா. ரவி, சரவணன் ஆகியோர் தலைமை வகித்தனர். அரசு ஊழியர் அமைப்புகளின் நிர்வாகிகள், ஆசிரியர் சங்கங்களின் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
ஊதிய மாற்றம், இடைக்கால நிவாரணம், புதிய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக. 22-ஆம் தேதி மாநில அளவில் நடைபெறவுள்ள ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த அரசுத் துறை ஊழியர்கள், ஆசிரியர்கள் முழு அளவில் பங்கேற்பது.
செப். 7-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆக. 26-ஆம் தேதி நாகை அவுரித் திடலில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடத்துவது என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.