கொள்ளிடம் பகுதியில் மர்ம நோயால் 60-க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்துள்ளதால் கவலையடைந்துள்ள விவசாயிகள், இந்நோயை கட்டுப்படுத்த கால்நடை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகேயுள்ள குத்தவக்கரை, சரஸ்வதி விளாகம், கொன்னக்காட்டுப்படுகை, குன்னம், ஆணைக்கரான்சத்திரம்,திட்டுப்படுகை, நாதல்படுகை, சந்தப்படுகை, முதலைமேடு, ஆச்சாள்புரம், தண்டேசநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் தொடர் மழை காரணமாக, கடந்த சில தினங்களாக கால்நடைகளுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, ஆடுகளை ஒருவித நோய் தாக்கி வருகிறது. இதனால், கடந்த நான்கு நாட்களில் 60-க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்துள்ளன. கொள்ளிடம் பகுதியில் உள்ள பல கிராமங்களில் ஆடுகளுக்கு பரவலாக இந்நோய் தாக்குதல் ஏற்பட்டு வருகிறது. மேலும், கொள்ளிடம் பகுதியில் இதுவரை 10-க்கும் மேற்பட்ட பசுமாடுகள் இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, மாதிரவேளூரைச் சேர்ந்த விவசாயி கூறியது:
கொள்ளிடம் பகுதியில் உள்ள ஆடு மற்றும் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு வரும்முன் காப்போம் நடவடிக்கையாக போதிய தடுப்பூசி போடவில்லை. இதனால், ஆடுகள் அதிக அளவு நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. எனவே, கால்நடைத் துறையின் அனைத்து கிராமங்களிலும் முகாம்கள் அமைத்து, தடுப்பூசி மற்றும் கால்நடைகளுக்கு ஏற்பட்டுள்ள நோய்களைக் குணப்படுத்த தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.