நாகை அருகே என்ஜின் இணைப்பு அறுபட்டு நின்ற சரக்கு ரயில் பெட்டிகள்: பயணிகள் ரயில்கள் தாமதம்

காரைக்கால் -  நாகை ரயில் தடத்தில் சென்ற ஒரு சரக்கு ரயிலில் இணைத்துக் கொண்டு வரப்பட்ட ரயில் பெட்டிகள், ரயில் என்ஜினுடனான தொடர்பு

காரைக்கால் -  நாகை ரயில் தடத்தில் சென்ற ஒரு சரக்கு ரயிலில் இணைத்துக் கொண்டு வரப்பட்ட ரயில் பெட்டிகள், ரயில் என்ஜினுடனான தொடர்பு அறுபட்டு நடுவழியில் நின்றன. இதனால், பயணிகள் போக்குவரத்து சுமார் 2 மணி நேரத்துக்கும் அதிகமான நேரம் தாமதமானது.
நாகை அருகே உள்ள காரைக்கால் தனியார் துறைமுகத்திலிருந்து வியாழக்கிழமை காலை நிலக்கரி ஏற்றிய சரக்கு ரயில் ஒன்று சேலம் நோக்கி புறப்பட்டது. 60 பெட்டிகளில் (வேகன்கள்) நிலக்கரிகளை நிரப்பிக் கொண்டு இந்த ரயில் சென்றுகொண்டிருந்தது.
காரைக்காலிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவு பயணித்த நிலையில், காரைக்கால் - நாகை இடையே உள்ள வெளிப்பாளையம் ரயில் நிலையத்தைக் கடக்கும்போது, ரயில் என்ஜினிலிருந்து 12-ஆவது பெட்டிக்கும், 13-ஆவது பெட்டிக்கும் இடையேயான இணைப்பு அறுந்தது. இதனால், 48 பெட்டிகள் தொடர்பு அறுந்த நிலையில், இயக்கமின்றி வெளிப்பாளையம் அருகே நின்றன. 
ரயில் பெட்டிகளின் இணைப்பு துண்டிக்கப்பட்ட தகவல் அறியாமல், 12 ரயில் பெட்டிகளுடன் அந்த சரக்கு ரயில் நாகை நோக்கி சென்றுகொண்டிருந்தது.  இதனிடையே, வெளிப்பாளையம் ரயில் நிலைய ஊழியர்கள், நாகை ரயில் நிலையத்துக்கு அளித்த தகவலின் பேரில்,  அந்த சரக்கு ரயில் நாகை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, காரைக்காலிலிருந்து ரயில் என்ஜின் கொண்டுவரப்பட்டு, பல்வேறு முயற்சிகளுக்குப் பின்னர், தள்ளு விசை மூலம்  ரயில் பெட்டிகள் நாகை ரயில் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, சரக்கு ரயிலுடன் இணைக்கப்பட்டன.
இதன் காரணமாக, நாகை - காரைக்கால் வழித்தடத்தில் 2 பயணிகள் ரயிலின் சேவை சுமார் 2 மணி நேரத்துக்கும் அதிகமான நேரம் தாமதப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com