சீர்காழி அடுத்த திருவெண்காட்டில் மரக்கன்றுகள் நடும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
சீர்காழி அடுத்த திருவெண்காடு ஊராட்சிக்குள்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் தாமரைக்குளம் தமிழக முதல்வரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட்டு கரைகள் பலத்தப்பட்டுள்ளன. அம்பேத்கர் நகர் பகுதியில் தெருக்கள் சுகாதார கிராம திட்டத்தின் கீழ் பராமரிக்கபட்டு வருகின்றன. கிராமத்தினர், தெருக்கள் மற்றும் வீடுகள்தோறும் 1,000 மரக்கன்றுகள் நட்டு பசுமை கிராமமாக மாற்ற முடிவு செய்தனர்.
அதன்படி, 1,000 மரக்கன்றுகள் நடும் தொடக்க நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சீர்காழி வட்டாட்சியர் பாலமுருகன் தலைமை வகித்தார். கிராம பொறுப்பாளர்கள் முனியாண்டி, சண்முகம், சந்திரபாலன், தேவேந்திரன், தனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராமத் தலைவர் கருணாநிதி வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில், சீர்காழி சட்டப்பேரவை உறுப்பினர் பி.வி. பாரதி கலந்துகொண்டு, மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார்.
இதில் முன்னாள் கவுன்சிலர் ஜெயபாலன், அதிமுக ஊராட்சி செயலர் அகோரம், கிராம நிர்வாக அலுவலர் மணிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.