நாகப்பட்டினத்தில் அரசாங்கப் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்க சிறப்புப் பேரவைக் கூட்டம் சங்க அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
சங்கத் தலைவர் ஏ.டி. அன்பழகன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எஸ். மூர்த்தி, இயக்குநர்கள் எஸ். ராஜம், எஸ். கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கைப்படி, சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச கடன் தொகையை, உரிய விதிகளுக்கு உள்பட்டு ரூ. 12 லட்சமாக உயர்த்தி வழங்குவது. இந்தக் கடன் தொகையைத் திருப்பி செலுத்துவதற்கான காலத்தை 120 மாதங்களாக நிர்ணயிப்பது. கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கான தனிநபர் கடனை ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக உயர்த்தி வழங்குவது உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிதி அளிப்பு: கூட்டத்தில், கூட்டுறவு வளர்ச்சி நிதி மற்றும் கல்வி நிதியாக ரூ. 3.88 லட்சத்துக்கான காசோலையை நாகை கூட்டுறவு ஒன்றிய மேலாண் இயக்குநர் தமிழ்வாணனிடம், சங்கத் தலைவர் ஏ.டி. அன்பழகன் வழங்கினார். சங்க இயக்குநர் பா. ராணி வரவேற்றார். செயலாளர் எஸ். விஜயலெட்சுமி நன்றி கூறினார்.