குத்தாலம் அருகே இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய கொண்டு சென்றபோது, இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகை மாவட்டம், குத்தாலம் ராஜகோபாலபுரம் ராஜகாலனி தெருவைச் சேர்ந்தவர் அம்மாசி மனைவி லட்சுமி (60). இவர், உடல் நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். அவரது சடலத்தை அடக்கம் செய்வதற்காக காவிரிக்கரை அருகில் உள்ள இடுகாட்டுக்கு உறவினர்கள் எடுத்துச் சென்றனர். மாற்று சமுதாயத்தினர் வசிக்கும் சத்யா நகர் வழியாக செல்லும்போது, இரு தரப்பினருக்குமிடையே தகராறு ஏற்பட்டது.
இதனால், ஏற்பட்ட மோதலில் ராஜகாலனியைச் சேர்ந்த பெண் உள்பட 10 பேர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, சத்யா நகரைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் அழகர் (30), ராஜா மகன் ராஜேஷ் (32), கணேசன் (55) ஆகிய மூவரையும், ராஜகாலனியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் தினேஷ் (21), ராமு மகன் ராஜேஷ் (22) ராதா மகன் மணிகண்டன் (22) ஆகிய மூவரையும் குத்தாலம் போலீஸார் கைது செய்தனர்.
மேலும், இரு பிரிவையும் சேர்ந்த 38 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்பகுதியில் அசம்பாவித சம்பவம் ஏற்படாமல் தடுக்க மயிலாடுதுறை காவல் துணைக் கண்காணிப்பாளர் கலிதீர்த்தான் உள்ளிட்ட 4 டிஎஸ்பிக்கள் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.