சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த பெண், தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயிலுக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இந்த தோப்பில் கடந்த ஏப்ரல் மாதம் 16-ஆம் தேதி மேலச்சாலை பெரிய தெருவைச் சேர்ந்த அழகேந்திரன் தேங்காய் பறிக்கும்போது, தவறி விழுந்து உயிரிழந்தார்.
இந்நிலையில், இழப்பீடு வழங்கக் கோரி சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்த அழகேந்திரனின் மனைவி சுந்தரி, திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி, தீக்குளிக்க முயன்றார். அருகில் இருந்தவர்கள் தடுத்தனர். பின்னர், வட்டாட்சியர் பாலமுருகன், சுந்தரியை சமாதானப்படுத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இதுகுறித்து சீர்காழி போலீஸார் விசாரனை மேற்கொண்டுள்ளனர்.