நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் துலாக்கட்ட காவிரி பகுதியில் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் நீர்த்தேக்கம் அமைக்கும் பணியை சட்டப்பேரவை உறுப்பினர் வீ. ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
மயிலாடுதுறையில் காவிரி புஷ்கரம் திருவிழா வரும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறுகிறது. இவ்விழாவின்போது, பக்தர்கள் நீராடுவதற்கு ஏற்ற வகையில் மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியின் மையப் பகுதியில் தண்ணீரைத் தேக்கிவைப்பதற்காக சுமார் 115 மீட்டர் நீளம், 20 மீட்டர் அகலத்தில் சுமார் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் நீர்தேக்கம் அமைக்கப்படவுள்ளது.
பொதுமக்கள் பங்களிப்பு, மயிலாடுதுறை எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. ஆகியோரது தொகுதி மேம்பாட்டு நிதி ஆகியவற்றுடன் நடைபெறும் இப்பணியை, மயிலாடுதுறை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வீ. ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு, பணிகள் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
ஆய்வின்போது, பொதுப்பணித்துறை மயிலாடுதுறை கோட்டச் செயற்பொறியாளர் பி. செந்தில்குமரன், உதவிப் பொறியாளர் சங்கர், அதிமுக நகரச் செயலர் விஜிகே. செந்தில்நாதன், காவிரி புஷ்கரம் திருவிழா கமிட்டிச் செயலர் சி. முத்துக்குமாரசாமி ஆகியோர் உடனிருந்தனர்.