நாகை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில் பயனாளிகள் 7 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நாகை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம், மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தலைமை வகித்தார்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், குறைகளுக்குத் தீர்வுக் கோரியும் பொதுமக்களிடமிருந்து 232 மனுக்களும், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டத்திலிருந்து 20 மனுக்களும் பெறப்பட்டுத் தொடர்புடையத் துறைகளின் நடவடிக்கைகளுக்குப்
பரிந்துரைக்கப்பட்டன.
இதில், 7 மனுக்களுக்கு உடனடி தீர்வு அளிக்கும் வகையில், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் ஒருவருக்கு ரூ. 6,500 மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள், 3 பேருக்கு தேசிய அடையாள அட்டை மற்றும் மூன்று சக்கர சைக்கிள்கள், ஒருவருக்கு காதொலிக் கருவி, 2 பேருக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதிய ஆணை ஆகியன வழங்கப்பட்டன.
மாவட்ட வருவாய் அலுவலர் எஸ். கருணாகரன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் கோ. தேன்மொழி, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.