நாகை புத்தூர் ரயில்வே மேம்பாலம் இணைப்பில் விரிசல் அதிகமானதால், அந்தப் பாலம் வழியேயான போக்குவரத்து சனிக்கிழமை இரவு நிறுத்தப்பட்டது.
கிழக்குக் கடற்கரை சாலை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டது நாகை -
தூத்துக்குடி கிழக்குக் கடற்கரை சாலை. இந்தச் சாலையில், நாகை புத்தூர் அருகே அமைக்கப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலம் கடந்த 2013-ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. நாகை - வேளாங்கண்ணி தடத்தில் அமைந்துள்ள இந்தப் பாலம், கிழக்குக் கடற்கரை சாலை வழியே செல்லும் வாகனங்களுக்கான முக்கிய போக்குவரத்துத் தடமாக உள்ளது.
இந்த நிலையில், இந்தப் பாலத்தில் உள்ள ஒரு இணைப்புப் பகுதி விரிவு அடைந்து வருவதாக அண்மைக்காலமாக புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், அந்தப் பாலத்தின் வடப்புற பகுதியில் உள்ள ஒரு இணைப்பில் சுமார் அரை அடி அகலத்துக்கு விரிசல் ஏற்பட்டிருந்தது சனிக்கிழமை தெரியவந்தது. இதனால், அவ்வழியே பயணிக்கும் வாகன ஓட்டிகள் அச்சத்துக்குள்ளாக நேரிட்டது.
போக்குவரத்து நிறுத்தம்...
விரிசல் ஏற்பட்ட நிலையிலும் மாலை நேரத்தில் அந்தப் பாலம் வழியே வாகனங்கள் இயக்கப்பட்டன. இருப்பினும், இரவு நேரத்தில் இந்தப் பாலம் வழியேயான போக்குவரத்துத் தடுக்கப்பட்டது.
கிழக்குக் கடற்கரை சாலை வழியே வாஞ்சூர் பகுதியிலிருந்தும், வேளாங்கண்ணி பகுதியிலிருந்தும் வந்த வாகனங்கள் பாலம் அருகே உள்ள புத்தூர் ரயில்வே கடவுப் பாதை சாலை வழியே இயக்கப்பட்டன. பாலம் பகுதியில், நாகை நகர காவல் நிலைய போலீஸார் அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில்
ஈடுபட்டிருந்தனர்.