வேதாரண்யம் அருகே முன்விரோதம் காரணமாக விவசாயி அரிவாளால் வெட்டப்பட்டதாக போலீஸில் ஞாயிற்றுக்கிழமை புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வேதாரண்யம் அருகேயுள்ள தகட்டூர் ராமகோவிந்தன் காடு பகுதியைச் சேர்ந்தவர் வே. குமரவேல் (39). விவசாயி. ஆண்டியப்பன் காடு, மருதூர் தெற்கு பகுதியைச் சேர்ந்தவர்கள் வேலாயுதம், விஜயகுமார், துரைராஜ்.
வேலாயுதம் மற்றும் குமரவேல் இடையே மரங்கள் வெட்டுவது தொடர்பாக ஏற்கெனவே முன்விரோதம் இருந்ததாம். பின்னர் பலமுறை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மருதூர் எடைப்பாலம் அருகே குமரவேல் வந்தபோது அவரை வழிமறித்த சிலர், அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் காயமடைந்த குமரவேல், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில், வேலாயுதம், விஜயகுமார், துரைராஜ் ஆகியோர் மீது வாய்மேடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.