சீர்காழி அருகே சவுக்கு மற்றும் முந்திரி தோப்பில் வியாழக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மரங்கள் நாசமாகின.
சீர்காழியை அடுத்த ஆலங்காடு பகுதியில் வரதராஜன் என்பவருக்குச் சொந்தமான சவுக்கு மர தோப்பு உள்ளது. இந்த தோப்பில் வியாழக்கிழமை பிற்பகலில் தீப்பிடித்தது. வெயிலின் காரணமாக தீ முற்றிலும் பரவி சுமார் 10 ஏக்கரில் இருந்த சவுக்கு மரங்கள் எரிந்து நாசமாகின.
இதேபோல், சீர்காழியை அடுத்த வேட்டங்குடி ஊராட்சிக்குள்பட்ட கூழையார் பகுதியில் குப்புநாடார், பாலமுருகன் ஆகியோருக்குச் சொந்தமான முந்திரி தோப்பு உள்ளது. இந்த தோப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், சுமார் 15 ஏக்கரில் இருந்த முந்திரி மரங்கள் எரிந்து சேதமடைந்தன. தகவலறிந்த சீர்காழி தீயணைப்பு நிலைய வீரர்கள் இரு இடங்களுக்கும் சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.