இலங்கை முள்ளிவாய்க்கால் போர் 8-ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அப்போரில் இறந்த தமிழர்களுக்கு சீர்காழி உப்பனாற்றில் தர்ப்பணம் மற்றும் ஆத்ம சாந்தி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்து மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கட்சியின் மாநில செயலர் கொள்ளிடம் து. சுவாமிநாதன், மாவட்டத் தலைவர் சோலை கோவிந்தராஜன், மாவட்ட அமைப்பாளர் கணேசன் பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதுகுறித்து மாநில செயலர் சுவாமிநாதன் கூறியது:
இலங்கையில் தமிழர்களின் பகுதிகளை ஆக்கிரமித்துள்ள சிங்களர்களை வெளியேற்ற வேண்டும். தமிழர்களின் மீள் குடியேற்றத்துக்கு தேவையான நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும். இந்து கோயில்கள் இடிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்படுவதுடன், இடிக்கப்பட்ட கோயில்களை மீண்டும் கட்டித் தர வேண்டும்.
சிதம்பரம் நடராஜ பெருமானை தரிசிப்பதை இலங்கை தமிழர்கள் தங்கள் வாழ்நாள் லட்சியமாகக் கொண்டுள்ளனர். சிதம்பரத்தில் மட்டுமே ஈழத் தமிழர்களுக்குச் சொந்தமான 32 திருமடங்கள் உள்ளன. வருகிற ஆனி திருமஞ்சனத்துக்கு காங்கேசன் துறைமுகத்திலிருந்து காரைக்கால் துறைமுகத்துக்கு கப்பல் போக்குவரத்தைவிட இலங்கை அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.