வெளிநாடுகளிலிருந்து கருப்பு பணத்தை மீட்க மத்திய அரசு தவறிவிட்டது என மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லா குற்றம்சாட்டினார்.
நாகை மாவட்டம், சீர்காழியில் வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அவர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
ஒரு கோடி பேருக்கு மேல் வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் மோடி கூறினார். ஆனால், தற்போது நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த மன்மோகன்சிங் ஆட்சியில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், மோடி ஆட்சியில் 4 லட்சம் பேருக்குத்தான் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து கருப்பு பணத்தை மீட்க மத்திய அரசு தவறிவிட்டது.
கூடங்குளம் அணுஉலை இயங்காமல் முடங்கிக் கிடக்கிறது. அணுஉலை திட்டங்களை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
விவசாயிகள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை வழங்காதது கண்டிக்கத்தக்கது. கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்து, சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் இதுவரை தடுப்பணை கட்ட தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அதன்படி, ரஜினி அரசியலுக்கு வருவது அவரது விருப்பம் என்றார் ஜவாஹிருல்லா.
மாநில விவசாய அணி செயலர் முசாஹூதீன், தமுமுக மாவட்டச் செயலர் சேக் அலாவூதீன், மாவட்ட பொருளாளர் அமீன், மாவட்ட இளைஞரணி செயலர் ஹாஜாமொய்தீன், மருத்துவரணி செயலர் ஆசிக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.