கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றபோது காணாமல் போன நாகை, வேதாரண்யம் மீனவர்கள் 11 பேர் மீட்பு: கடலில் தத்தளித்த இலங்கை மீனவர்களும் மீட்கப்பட்டனர்

நாகை, வேதாரண்யத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது, காணாமல்போன மீனவர்கள் 11 பேர் சனிக்கிழமை கரை திரும்பினர். அவர்களுடன் கடலில் தத்தளித்த இலங்கை மீனவர்கள் 2

நாகை, வேதாரண்யத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது, காணாமல்போன மீனவர்கள் 11 பேர் சனிக்கிழமை கரை திரும்பினர். அவர்களுடன் கடலில் தத்தளித்த இலங்கை மீனவர்கள் 2 பேரும் மீட்கப்பட்டனர்.
நாகை அருகேயுள்ள கீச்சாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கதுரை மகன் பன்னீர். இவருக்கு சொந்தமான பைபர் படகில் நவநீதன் (28), கிருஷ்ணன் (28), சுந்தரகுமார் (27), ரெத்தினகுமார் (27), அஞ்சப்பன் (50), குருநாதன் (26) ஆகிய 6 மீனவர்கள் புதன்கிழமை இரவு கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். வியாழக்கிழமை இரவு இவர்கள் கரை திரும்பியிருக்க வேண்டும். ஆனால், வெள்ளிக்கிழமை வரை மீனவர்களிடமிருந்து எவ்வித தொடர்புகளும் இல்லாததால், மீனவ பஞ்சாயத்தார்கள், மீன்வளத் துறை அதிகாரிகள் மற்றும் கடலோரக் காவல் நிலையப் போலீஸாரிடம் தகவல் தெரிவித்தனர். மேலும், அவர்களும் மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், 6 மீனவர்களும் சனிக்கிழமை அதிகாலை கரை திரும்பினர். இதுகுறித்து கரை திரும்பிய மீனவர்கள் கூறுகையில், 'மீன்பிடித்தபோது இயந்திரப் பழுதால் படகு நின்று விட்டதாகவும், பின்னர் பழுது நீக்கப்பட்டு, கிளம்பி வந்ததால் தாமதமாகிவிட்டதாகவும் தெரிவித்தனர்.
வேதாரண்யம், இலங்கை மீனவர்கள்: இதேபோல், ஆறுகாட்டுத்துறை மீனவர் கிராமத்தைச் சேர்ந்த கு.மணி (20), சி. ராமன் (45), செல்வம் (45), க. குமரன் (28), சி. குணசீலன் (35) ஆகிய 5 பேரும் நா. சுரேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான கண்ணாடியிழைப் படகில் வியாழக்கிழமை கடலுக்குள்
சென்றனர்.
இலங்கை, பருத்தித்துறை அருகே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தீபன் (37). அதே பகுதியைச் சேர்ந்த வினோத் (29) ஆகியோர் இலங்கையிலிருந்து மே 16-ஆம் தேதி நாட்டுப்படகு மூலம் மீன்பிடிக்க கடலுக்கு வந்துள்ளனர். இவர்களது படகு பழுதாகி கடலில் நின்றிருந்தது. இதையறிந்த ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் தங்கள் படகில் இலங்கை மீனவர்களை ஏற்றிக்கொண்டு வந்தனர். அப்போது, கடல் சீற்றம் காரணமாக, படகு கவிழ்ந்து 7 மீனவர்களும், கடலில் தத்தளித்தனர். இதற்கிடையில் ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் வெள்ளிக்கிழமை கரை திரும்பாததால் அவர்களை தேடும் பணி நடைபெற்றது. இந்நிலையில், நாகையைச் சேர்ந்த சுந்தரமணி என்பவருக்கு சொந்தமான படகில் வந்த மீனவர்கள், கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 7 பேரையும் மீட்டு, நாகைக்கு அழைத்து வந்தனர். பின்னர் இலங்கை மீனவர்கள் இருவரும் நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com