மயிலாடுதுறை தொகுதிக்கு உள்பட்ட குத்தாலம் ஒன்றியப் பகுதிகளில் மயிலாடுதுறை எம்எல்ஏ வீ.ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.
வாணாதிராஜபுரம், கடலங்குடி, திருமணஞ்சேரி, ஆலங்குடி, வில்லியநல்லூர்,சேத்திரபாலபுரம் ஆகிய ஊராட்சிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அப்போது மழையினால் சேதமடைந்த, சுவர் இடிந்த வீடுகளைப் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் மழையினால் சேதமடைந்துள்ள மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி, ஊராட்சி அலுவலகம் ஆகிய கட்டடங்களைப் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் சீர்செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். திருமணஞ்சேரி உத்வாகநாதசுவாமி திருக்கோயில் அருகே 10 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கப்படவுள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதுபோல் அப்பகுதிகளில் நடைபெற்று வரும் குடிமராமத்துப் பணிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகளைப் பார்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
வட்டார பெற்றோர் -ஆசிரியர் கழகத் தலைவர் சி.இராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வி.கோவிந்தராஜன், ஜான்சன், வருவாய் ஆய்வாளர் அனிதா, கட்சி பிரமுகர்கள்
உடன் சென்றனர்.