சீர்காழி அருகேயுள்ள எருக்கூர் வள்ளுவர் தெருவில் சாலை வசதி ஏற்படுத்த சீர்காழி சட்டப் பேரவை உறுப்பினர் பி.வி. பாரதி நடவடிக்கை மேற்கொண்டார்.
நாகை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள எருக்கூர் வள்ளுவர் தெருவில் வசித்து வரும் பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் சாலை வசதியின்றி, தங்களது குடியிருப்பைச் சுற்றியுள்ள வயல்களில் சென்று வந்தனர். மழைக் காலத்தில் வயலில் தண்ணீர் சூழ்ந்து கொள்வதும், அப்போது துணிகள் நனைந்து விடுவதும், மாற்றுத் துணிகள் எடுத்துச் சென்று பயன்படுத்துவதும் தொடர் கதையாக இருந்து
வருகிறது.
இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி பொதுமக்கள் சார்பில் சம்பந்தப்பட்டவர்களிடம் கூறியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் இதுகுறித்து தினமணியில் திங்கள்கிழமை (நவ.13) படத்துடன் செய்தி பிரசுரமானது. இதையறிந்த சீர்காழி சட்டப் பேரவை உறுப்பினர் பி.வி. பாரதி, எருக்கூர் வள்ளுவர் தெருவுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு, வள்ளுவர் தெரு மக்களுக்கு நிரந்தரமாக சாலை வசதி செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது வட்டாட்சியர் பாலமுருகன், கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.