மயானத்துக்கு செல்ல சாலை வசதி இல்லாததால், சீர்காழி அருகே உயிரிழந்தவர்களின் சடலத்தை தண்ணீரிலும், வயல் பகுதிகளிலும் தூக்கிச் செல்லும் அவலத்தைப் போக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகேயுள்ள பன்னீர்கோட்டகம் கிராமத்தில் வசிக்கும் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்களில் யாரேனும் உயிரிழந்தால், கிராமத்துக்குச் சொந்தமான ஒரு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மயானத்தில் இறுதி சடங்கு செய்யப்படும். மயானத்துக்குச் செல்ல சாலை வசதியில்லாததால், சடலத்தை சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் சுமந்து செல்ல வேண்டும். மழைக் காலத்தில் சடலத்தை இடுப்பளவு தண்ணீரில் நடந்து சுமந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. பன்னீர்கோட்டக மயானத்துக்கு சாலை வசதி செய்துத்தர வலியுறுத்தி கிராமத்தினர் பலரும், பல முறை சம்பந்தப்பட்ட அலுவலர்களின் கவனத்துக்கு கொண்டு சென்றும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. அலுவலர்கள் யாரும் இந்த இடத்துக்கு வரவில்லை என்று கிராமத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து பன்னீர்கோட்டகம் கிராமமக்கள் கூறியது: சடலத்தை மயானத்துக்குச் சுமந்து செல்ல பெரிதும் சிரமமாக உள்ளது.
இதுகுறித்து உரிய அலுவலரிடம் தெரிவித்தும் பயன் இல்லை. விரைவில் சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால் கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தேர்தலை புறக்கணிக்கவும், குடும்ப அட்டைகள் மற்றும் வாக்காளர் அட்டைகளை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கவும் முடிவு செய்துள்ளோம் என்றனர்.