அகில பாரத துறவியர் சங்கம் மேற்கொண்டுள்ள காவிரிப் பாதுகாப்பு துலா ரத யாத்திரை திங்கள்கிழமை பூம்புகார் வந்தது.
அகில பாரத துறவியர் சங்கம் சார்பில், காவிரியில் ஆண்டுதோறும் வற்றாமல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி தமிழகத்தில் விவசாயம் உள்ளிட்ட தொழில்கள் செழிப்படைய வேண்டி காவிரி உற்பத்தியாகும் குடகுமலை தலைக்காவிரியிலிருந்து கடலோடு கலக்கும் பூம்புகார் வரை காவிரிப் பாதுகாப்பு மற்றும் துலா ரதயாத்திரை நடைபெற்று வருகிறது. நிகழாண்டு யாத்திரை குடகுமலையில் இருந்த அக்.29-ஆம் தேதி தொடங்கியது.
தமிழகத்தில் காவிரி பாய்ந்து செல்லும் ஊர்கள் வழியாக காவிரி அம்மனுடன் கூடிய ரதயாத்திரை நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக காவிரி கடலோடு கலக்குமிடமான நாகை மாவட்டம் பூம்புகாருக்கு திங்கள்கிழமை வந்தது. காவிரி சங்கமத் துறையில் கலச ஸ்தாபனம், லோபமுத்ரா யாகம் நடைபெற்றது. இதை வித்யாம்பாசரஸ்வதி சுவாமிகள் நடத்தினார். அப்போது பலவிதமாக நறுமணப் பொருட்கள் யாக குண்டத்தில் போடப்பட்டு மகாபூர்ணாகுதி நடைபெற்றது.
பின்னர் குடகுமலையிலிருந்து எடுத்துவரப்பட்ட புனிதநீர் மேளதாளம் முழங்க காவிரி அம்மன் சிலையுடன் காவிரி கடலோடு கலக்கும் இடமான சங்கமத்துறையில் ஊற்றபட்டன. அப்போது அங்கு கூடியிருந்த துறவிகள், பொதுமக்கள் நீராடினர். இதில் சுவாமி ராமானந்தமகராஜ், திருவெண்காடு கணபதிசுவாமிகள், காளிஸ்வரானந்தா சுவாமிகள், விழா அமைப்பாளர் அருள் வீரமணி சுவாமிகள், ஞானேஸ்வரிகிரி சுவாமிகள், பழவடியார் சுவாமிகள், சேலம் சரோஜினி சுவாமிகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட துறவிகள் பங்கேற்றனர்.