நாகை அருகேயுள்ள பாப்பாகோவில் சர்ஐசக் நியூட்டன் கல்வியியல் கல்லூரியில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் மழைக்கால நோய்கள், உணவுப் பாதுகாப்பு ஆகியவை குறித்த விழிப்புணர்வு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் நாகை நகராட்சி உணவு அலுவலர் ஏ.டி. அன்பழகன், மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் ஆர்.வி. ரவி ஆகியோர் பங்கேற்று விளக்கமளித்தனர்.
இதில் கல்லூரி தாளாளர் த. ஆனந்த், நிர்வாக அலுவலர் குமார், நாகை வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஆர். மஹாராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மழைக்கால நோய்கள் வராமல் தடுக்க, காய்ச்சிய குடிநீரையே பருக வேண்டும். சமையலறை உள்ளிட்ட உணவுப் பரிமாறும் இடங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். தரமான மளிகைப் பொருள்களை சமையலுக்கு பயன்படுத்த வேண்டும்.
அடைக்கப்பட்ட அல்லது பொட்டலமிடப்பட்ட உணவுப்பொருட்களை வாங்கும்போது, காலாவதியானதா, தயாரிப்பு விபரங்கள் உள்ளதா என்பதை பார்த்து வாங்கவேண்டும். சூடுபடுத்திய எண்ணெய்யை மீண்டும், மீண்டும் பயன்படுத்தக்கூடாது என கூட்டத்தில் பங்கேற்றவர்களிடம் அறிவுறுத்தப்பட்டது.