சீர்காழி நகராட்சிக்குள்பட்ட பூந்தோட்ட தெருவில் பகுதிநேர அங்காடி கட்டடம் கட்ட இடம் தேர்வு செய்யும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சீர்காழி நகராட்சி 5-ஆவது வார்டில் சுமார் 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த வார்டு மக்கள் பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க பிடாரி வடக்கு வீதியில் உள்ள நியாய விலைக் கடைக்குச் செல்ல வேண்டும். பிடாரி வடக்குவீதி நியாயவிலைக் கடையில் அதிக குடும்ப அட்டைதாரர்கள் பதிவு செய்து இருப்பதால், 5-ஆவது வார்டு பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் பகுதிநேர நியாயவிலைக் கடை திறக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சீர்காழி சட்டப்பேரவை உறுப்பினர் பி.வி. பாரதியிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து எம்எல்ஏவின் நடவடிக்கையைத் தொடர்ந்து சீர்காழி வட்டாட்சியர் பாலமுருகன், நகராட்சி ஆணையர் அஜிதாபர்வின் ஆகியோர் 2-வது வார்டுக்குள்பட்ட ட பூந்தோட்ட தெருவில் நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் புதிய பகுதிநேர நியாயவிலைக் கடைக்கு கட்டடம் கட்டுவது குறித்து ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது, நகராட்சி பொறியாளர் மெய்பொருள், பணிமேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியன், அதிமுக நகரச் செயலர் அ. பக்கிரிசாமி, ஜெ.பேரவை செயலர் ஏ.வி. மணி மற்றும் அதிமுக வார்டு பொறுப்பாளர்கள் சேகர், நாகை.செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.