சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் ஒருவழிப்பாதை அமைக்கவேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து தமாகா நாகை வடக்கு மாவட்ட தலைவர் பூம்புகார் எம்.சங்கர் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: வைத்தீஸ்வரன்கோயிலுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வாகனங்களில் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.மேலும் இக்கோயில் சீர்காழி-மயிலாடுதுறை பிரதான சாலையில் அமைந்துள்ளது. இந்த சாலை வழியாகத்தான் மயிலாடுதுறை-சீர்காழி-சிதம்பரம் செல்லும் அனைத்து வாகனங்களும் செல்லமுடியும்.
இதனால் வைத்தீஸ்வரன்கோயில் கீழவீதியிலிருந்து பேருந்துநிலையம் கடந்து செல்லும் வரை போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுவதால் நாள்தோறும் வாகனஓட்டிகள் அவதியடைந்துவருகின்றனர். ஆகையால் வைத்தீஸ்வரன்கோயிலில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பிரதான சாலையில் ஒருவழிப்பாதையாக மாற்றவும், மாற்று புறவழிச்சாலை ஏற்படுத்தித் தரவும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.