மயிலாடுதுறையில் உலக பார்வையாளர் (கண் ஒளி) தின விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
உலக பார்வையாளர் தினத்தை முன்னிட்டு, தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் இயங்கும் 104 சேவை நிறுவனம், மயிலாடுதுறை சி.சி.சி. சமுதாயக் கல்லூரி, அருமை இல்லம், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை ஆகியவை இணைந்து விழிப்புணர்வுப் பேரணியை நடத்தின.
நிகழ்ச்சிக்கு,104 மற்றும் 108 சேவையின் நாகை மாவட்ட செயல் அலுவலர் பி. பாரதிராஜா தலைமை வகித்தார். சமுதாயக் கல்லூரியின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆர். காமேஷ், அருமை இல்லம் நிர்வாக அலுவலர் அருமைநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை நிலைய அலுவலர் எஸ். முனியாண்டி, பேரணியை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். வருவாய்க் கோட்டாட்சியர்அலுவலக வளாகத்தில் புறப்பட்ட பேரணி, கச்சேரி சாலை வரை சென்று, தொடங்கிய இடத்திலேயே நிறைவுப் பெற்றது. பேரணியில் பங்கேற்ற சமுதாயக் கல்லூரி மாணவியர் கண்களில் கருப்புத்துணியை கட்டிக்கொண்டு, கண்தானத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு பதாகைகளை கையிலேந்தியவாறு சென்றனர். நிகழ்ச்சியில், 108 அவசர கால ஊர்தி ஓட்டுநர்கள் ரவிச்சந்திரன், செல்வக்குமார், மருத்துவ உதவியாளர்கள் சி. விக்டர், ஜான்சிராணி, சமுதாயக் கல்லூரி தாளாளர் என். உமா நாகேஸ்வரி, செயலர் வி. லெட்சுமிபிரபா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.