தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சீர்காழியில் பட்டாசு விற்பனை செய்வோர் உரிய விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
சீர்காழி பகுதியில் உரிமம் பெற்று பட்டாசு விற்பனை செய்வோர் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கலந்தாய்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. சீர்காழி காவல் துணைக் கண்காணிப்பாளர் சேகர் தலைமை வகித்தார். காவல் ஆய்வாளர்கள் செல்வம், சிவப்பிரகாசம், தீயணைப்பு நிலைய அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், காவல் துணைக் கண்காணிப்பாளர் சேகர் பேசும்போது, தமிழகத்தில் சீனப் பட்டாசு விற்பனை செய்ய அனுமதியில்லை. மீறி விற்பனை செய்பவர்களின் கடை உரிமம் ரத்து செய்யப்பட்டு, உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கடை உரிமையாளர்கள், கடையின் உரிமம், பட்டாசு இருப்பு பதிவேடு, கொள்முதல் பதிவேடு ஆகியவற்றை சரியாக பராமரிக்க வேண்டும். தீத்தடுப்பு உபகரணங்கள் வைத்த பின்னர்தான் வெடிபொருள் விற்பனை செய்யவேண்டும். தீயணைப்பு மீட்பு பணித் துறையின் தடையில்லா சான்று பெறவேண்டும். கடையின் உள்ளே மின்இணைப்பு இருந்தால் உடனடியாக அகற்றப்படவேண்டும். விபத்தில்லா தீபாவளி கொண்டாட பாதுகாப்பு விதிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு விளம்பர பலகைகள் வைக்கவேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்த கூட்டத்தில் காவல் துணை ஆய்வாளர்கள் மற்றும் பட்டாசு விற்பனையாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.