சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தில் தமிழக அரசின் திருமண உதவித் திட்டத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்(ஊராட்சிகள்) ஞானசெல்வி, செம்மங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் ராஜமாணிக்கம், தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் பூராசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சீர்காழி சட்டப்பேரவை உறுப்பினர் பி.வி. பாரதி, 125 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தங்கம் வழங்கினார். அப்போது அவர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்களை நூறு சதவீதம் நிறைவேற்றும் அரசாக எடப்பாடி கே.பழனிசாமி அரசு சிறப்பாக செயல்படுகிறது. இந்த அரசை எந்த விதத்திலும் யாரும் குறை சொல்ல முடியாது என்றார்.
விழாவில், அதிமுக மாவட்ட பொருளாளர் வா. செல்லையன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் நற்குணன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஏ.கே. சந்திரசேகரன், முன்னாள் ஊராட்சித் தலைவர் ஆனந்தநடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஒன்றிய மேலாளர் சசிக்குமார் வரவேற்றார். விரிவாக்க அலுவலர் ஜான்சி நன்றி கூறினார். முன்னதாக கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்தில் நடந்த விழாவில் 130 பயனாளிகளுக்கு எம்எல்ஏ பி.வி. பாரதி தாலிக்கு தங்கம் வழங்கினார்.