தரங்கம்பாடி வட்டம், அனந்தமங்கலம் கிராமத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயிலில் ஸ்ரீ திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயருக்கு அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆஞ்சநேயர் 10 கரங்களுடன், பத்துவித ஆயுதங்கள் ஏந்தி, நெற்றிக்கண்ணுடன் காட்சியளிக்கிறார். அனுமன் தலமான இங்கு அமாவாசை தினத்தில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, விளம்பி தமிழ்ப் புத்தாண்டு முதல் அமாவாசையையொட்டி, உத்ஸவர் ஆஞ்சநேயர் சுவாமியை கோயில் மண்டபத்தில் எழுந்தருளச்செய்து, சிறப்பு அபிஷேக- ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சிவக்குமார் செய்திருந்தார்.