மயிலாடுதுறையில் திங்கள்கிழமை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி மயிலாடுதுறை, குத்தாலம் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மற்றும் தரங்கம்பாடி வட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் எம். மூர்த்தி தலைமையில், சித்தர்காட்டில் உள்ள எம்.ஆர்.எம் நவீன அரிசி ஆலையிலிருந்து லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் 100-க்கும் மேற்பட்டோர், பேரணியாகச் சென்று மயிலாடுதுறை ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சங்க துணைத் தலைவர் சார்லஸ், செயலர் வி.கே. ராவணக்குமார், துணைச் செயலர் சேட்டு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
குத்தாலத்தில் உண்ணாவிரதம்: இதேபோல், குத்தாலம் பேருந்து நிலையம் முன்பு, குத்தாலம் வட்டம், போட்டோ, விடியோ ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தினர் காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
சங்கத் தலைவர் ஏ. சக்திவேல் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில், செயலர் எம். சக்திவேல், சங்க நாகை மாவட்டத் தலைவர் எஸ். குமார், செயலர் சரவணன், பொருளர் செல்லத்துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.